Thursday 6 November 2008

Singapore Tamil site for Childern learning in TAMIL Language

http://www1.moe.edu.sg/namnaadi/archives/2008/oct/index.htm

[தமிழ்நாடு] திராவிடத்தின் எதிர்காலம் - என் பார்வை ----மாலன்

மாலனின் "திராவிடத்தின் எதிர்காலம்" பதிவில் எழுதிய பின்னூட்டம்.

அன்புள்ள மாலன்,

நேர்மையாக எழுதியிருக்கிறீர்கள். உலகமயமாக்கலும் அதன் பின்புலங்கள் சார்ந்த விஷயங்களிலும் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. திராவிட அரசியல் பற்றி எழுத வேண்டுமானால், ஒட்டு மொத்த இந்திய அரசியலை அணுகியே திராவிட அரசியலையும் அணுக வேண்டும் என்பது என்னுடைய சின்ன அபிப்ராயம். நீங்கள், கொள்கையிலிருந்து நீர்த்துப் போன, பாப்பாத்தியினை தலைவியாக கொண்ட திராவிட கட்சி, தன் மகன்/மகள்/குடும்பத்திற்கு அதிகாரம் விநியோகம் பண்ணும் தலைவர் என்று வரிசையாக பல்வேறு பிரச்சனைகளை நேரடியாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்திய அரசியலினை என்னை விட நீங்கள் கடந்த 20 - 30 ஆண்டுகளாக அருகிலிருந்து கவனித்து வருகிறீர்கள். அஸ்ஸாமில் மத்திய அரசுக்கு எதிரான மாணவர் புரட்சி நடத்தி முதல்வரான பிரபுல்லகுமார் மகந்தாவின் நிலையென்ன ? அவர்களின் கட்சி என்னவாயிருகிறது ? மாயாவதி ஆட்சிக்கு வந்ததின் பின்னிருக்கும் அரசியல் சூழல்கள் என்ன ? தெஹல்கா தொடங்கி தெருமுனை வரை காறி துப்பிய பிறகும் மோடி ஆட்சிக்கு வந்ததின் காரணங்கள் என்ன ? பிஜேபியின் மீது சவாரி செய்து கொண்டு, பின் பிஜேபி பதவிக்கு வரவேண்டும் என்கிற நிலையில் காலை வாரிய ஜேடிஎஸ்ஸும், தேவ கவுடாவும் / குமாரசாமியின் இன்றைய நிலையென்ன ? சந்திரபாபு நாயுடு ஹைதராபாத் மட்டுமே முன்னேற்றினார் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த காங்கிரஸும் ராஜசேகர் ரெட்டியும் இந்த வருட தேர்தலில் தேறுவது கஷ்டப்படுவது ஏன் ? மக்களுக்கான இயக்கம் என்றறியப்பட்ட கம்யுனிஸ்ட் கட்சி கேரளாவில் CPI(M) Pvt. Ltd என்கிற அளவில் இருப்பதற்க்கான காரண காரியங்கள் என்ன ?

உண்மையில் இரண்டு விதமான பொருளாதாரங்கள் இருக்கின்றன. அரசியல் பொருளாதாரம் (Political Economics) மற்றும் சித்தாந்த ரீதியான பொருளாதாரம் (Idealist Economics) தண்டவாளங்கள் போல இவையிரண்டும் எந்த கால கட்டத்திலும் ஒன்று சேராது. [அரசியல் பொருளாதாரம் Vs. சித்தாந்த ரீதியான பொருளாதாரம், அதன் பின் விளைவுகளைப் பற்றி ஆராய தான் இந்தியாவின் சமச்சீரின்மை பற்றி தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பி வருகிறேன்] திராவிட அரசியல் என்பது சித்தாந்த ரீதியான பொருளாதாரத்திலிருந்து அரசியல் பொருளாதாரத்திற்கு மாறியதன் பரிணாம வளர்ச்சி தான் இலவச டிவி. உண்மையில் சென்ற தேர்தலில் இலவச டிவி, அரிசி எனக் கொடுத்தும், கூட்டணி ஆட்சியால் தான் திமுகவால் பதவியில் அமர முடிந்திருக்கின்றது. ஜெயா டிவி சொல்லுவது போல இன்றைக்கும் இது மைனாரிட்டி திமுக அரசு தான்.

ஆனால் திராவிட அரசியல் தமிழ்நாட்டிற்கு பங்களித்தவை எவ்வளவோ இருக்கின்றன. இந்தியாவே இட ஒதுக்கீடு என்கிற பேச்செடுத்தாலே அலறும்போது ஒரு சிறு சலனம் கூட தமிழ்நாட்டில் இருக்காது. ஊரே அரசு தான் பள்ளிகளை / கல்லூரிகளை நடத்த வேண்டும் என்கிற நிலையில் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து நாம் தொடங்கிய தனியார் பொறியியல் கல்லூரிகள் தான் இன்றைக்கு இந்தியாவெங்கும் வியாபித்திருக்கிற தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் தமிழர்களை முன்னெடுத்து சென்றிருக்கிறது.

வை. கோ போன்ற முக்கியமான திராவிட தலைவர்கள் அரசியல் ரீதியாக பல்வேறு கூட்டணி சூழ்நிலையில் இருந்தாலும், இலங்கை தமிழர்களுக்கான குரல் இன்னமும் ஒலிக்கின்றது. திராவிடம் நேரடியாக சாராத, ஆனால் திராவிட இயக்கத்தினால் உந்தப்பட்டதால் தான் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் என அரசியல் இயக்கங்கள் உருவாகி இருக்கின்றன. எப்படி பாரதீய ஜனதா கட்சியின் மூலங்களை தேடினால், அவை ஜன சங், வி.எச்.பி. சங் பரிவார் ஆரம்பத்தில் கொண்டு போய் விடுமோ, அதை போல, திராவிட அரசியலின் பரிணாம வளர்ச்சி என்பது நேரடியாக திமுக, அதிமுக, மதிமுக வால் மட்டும் தனியாக இருக்காது, அவை பெரியாரின் கொள்கைகள், அண்ணாவின் நேர்மை, காமராஜின் எளிமை என மொத்தமாக உணரப்பட்டு பல்வேறு கட்சிகளால், சாராம்சத்தினை ஏற்றுக் கொண்டு, தலைவர்களை புறந்தள்ளி வேறுவிதமாக வேர் விட்டு வளரும் என்பது என்னுடைய பார்வை. மற்றபடி, திராவிட அரசியலினை திமுக Vs. அதிமுக என்று பார்ப்பதில் உடன்பாடில்லை.

மற்றபடி தமிழ், தமிழர், திராவிடம் என்று extrapolate செய்வதில் நம்பிக்கையில்லை. திராவிட கட்சிகளாக பரிணமித்து அரசியலுக்கு வருவதற்கு முன்பும், தமிழும், தமிழரும் வாழ்ந்தார்கள். கிட்டத்திட்ட 45 ஆண்டுகளாக தேசிய கட்சிகள், புதிய கட்சிகள், சாதி கட்சிகள் மத்தியிலும், திராவிட அரசியலும், தமிழும், தமிழர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். இனிமேலும் வாழத்தான் போகிறார்கள். உண்மையில் இந்தியாவிலேயே, அரசியல் கலப்பில்லாத பெரும்பான்மை முன்னேற்றம் தமிழ்நாட்டில் தான் நடந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. அரசியல் நேர்மையாய் இருந்திருப்பின் இன்னமும் முன்னேறியிருப்போம் என்பது ஒரு பார்வை. கருணாநிதி Vs. ஜெயலலிதாவினை ஒரு சாதாரணணாய் between devil and deep sea என்று ஒரு குறுகிய பார்வை பார்த்து பேசினாலும், ஒட்டுப் போட்ட மறுகணமே மறந்துவிட்டு, தத்தம் வேலைகளை பார்க்க போய் விடுகின்ற கூட்டம் தான் பெரும்பாலானவர்கள். அவர்களின் உழைப்பு, வியர்வை, மற்றும் உலகமயமாக்கலின் பங்கு இவை தான் தமிழகத்தையும், தமிழினத்தையும் முன்னேற்றிக் கொண்டிருக்கிறதேயொழிய, தமிழ் தான் உயிர் என்று மேடைப் பேச்சு பேசும் எவராலும், இனத்தையோ, மொழியையோ, நம் வரலாறையோ முன்னெடுத்து செல்ல முடியாது.

நன்றி.

Thursday, October 04, 2007

[இந்தியா] பாருக்குள்ளே நல்ல நாடு!

பஞ்சாப் , ஹரியானாவின் விவசாயிகளுக்கு காசு கொடுக்க மறுக்கும் மத்திய அரசு, ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமையினை இறக்குமதி செய்திருக்கிறார்கள். கொள்முதல் விலையாக ரூ.9 [ஒரு கிலோவிற்கு என்று நினைக்கிறேன்] இந்திய விவசாயிகளுக்கு தர மறுத்த நடுவண் அரசு தான், கிலோ ரூ.13-க்கு மட்டமான கோதுமையினை இறக்குமதி செய்து விநியோகித்திருகிறது. இந்த வார பிஸினஸ் டூடேயில் படித்தது. ஆனால் அமைச்சர்களோ அடுத்த 11 மாதத்துக்கு தேவையான சரக்கு நம்மிடத்தில் இருக்கிறது என்று ஜல்லியடிக்கிறார்கள். வாங்கி சாப்பிட்ட மக்களுக்கோ எல்லா வியாதியும் வருமளவுக்கு quality control பார்த்திருக்கிறார்கள். இந்தியாவில் நீங்கள் விவசாயியாக இருந்தால், ஒழுங்கு மரியாதையாக நகரங்களுக்கு வந்து கூலியாட்களாக வேலை பாருங்கள். அதிகப்பிரசங்கித்தனமாக விவசாயமெல்லாம் பார்க்காதீர்கள் என்று சொல்லாமல் சொல்வது போல இருக்கிறது.

பார்க்க: சி.என்.என்.- ஐ.பி.என் செய்தி

ராஜின்ந்தர் பூரிக்கு இருக்கக்கூடிய தைரியம் சும்மா சொல்லக்கூடாது. அவுட்லுக் போன்ற ஒரு முக்கியமான பத்திரிக்கையில் திமுக தலைவர் கருணாநிதியினை கிழித்திருக்கிறார். இதில் கருணாநிதியினை உள்ளே தள்ளச் சொல்லும் சட்டம் வேறு.

"Did Ram study engineering in college? He was a drunkard. There is no historical evidence that Ram ever existed," Tamil Nadu CM M. Karunanidhi has said. It matters little what Ram was or was not. What matters is that this veteran politician has violated Section 153-A of the Indian Penal Code by creating disaffection among communities. Under law, he can be prosecuted and sent to prison for three years.

அடுத்து ராஜின்ந்தர் பூரி கிழிக்க வேண்டிய கியுவில் இருப்பவர்கள் - ஜெயலலிதா, அத்வானி, சோனியா, மன்மோகன் சிங் மற்றும் மொத்த சங் பரிவார் கும்பல். எழுத்தினை படித்தப் போதே இது ஒரு ஆரஞ்சு பார்ட்டி என்று கண்டிப்பாக தெரிகிறது. "மவனே நீ மெட்ராஸ் வராமயா போய்டுவே, அப்ப வைச்சுகறோம் மச்சி கச்சேரிய"

முக்கிய எச்சரிக்கை: இதய பலவீனம் கொண்டவர்கள், சடாலென உணர்ச்சி வசப்படுபவர்கள், திமுக தொண்டர்கள் இதை படிக்காமல் இருப்பது நல்லது.

பார்க்க - அவுட்லுக் - புல்ஸ் ஐ

அருகருகே இரண்டு ட்ரெயின்கள் ஸ்டேஷனுக்கு வந்ததில் ஏற்பட்ட நெரிசலில், உத்தரபிரதேஷின் முஹல்சராயில், ஏற்பட்ட தடியடியில் 14 பெண்கள் மரணமடைந்திருக்கிறார்கள். இறந்த பெண்கள் அனைவரும் பீகாரினை சேர்ந்தவர்கள். ஜூதியா என்கிற பண்டிகையினை கொண்டாட உத்தரபிரதேஷுக்கு வந்திருந்தவர்கள். ஜூதியா என்பது அம்மாக்கள் தங்கள் மகன்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுவது, எப்படி தமிழ்நாட்டில் பெண்கள், தங்கள் கணவன்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று வரலட்சுமி நோன்பு இருப்பார்களோ அதைப் போல. ஆனால் இந்த தடியடி வெறும் நெரிசலால் மட்டும் ஏற்பட வாய்ப்பில்லை., இவ்வளவு பெண்களும் ஏன் இரண்டு டிரெயின்களை பிடிக்க இவ்வளவு அவசரப்படவேண்டும், 10 நிமிட இடைவெளியில் ஒரே இடத்துக்கு போக இரண்டு டிரெய்ன்களை எப்படி ரெயில்வே நிர்வாகம் அனுமதித்தது [கோயம்பேடு போன்ற பஸ் நிலையங்களில் இது சாத்தியம்] பல கேள்விகள், ஆனால் போனது அப்பாவி உயிர்கள். இந்தியாவில் உயிர்களுக்கான மரியாதை இவ்வளவுதான். நண்பர் சுரேஷ், கொத்து பரோட்டா எழுதிய போது எழுதிய பின்னூட்டத்தில் ஏன் எல்லா ஊர்களின் இருண்மையான பக்கங்களை மட்டுமே எழுதுகிறீர்கள் என கேட்டிருந்தார். உண்மையில் நிழலுலகத்தினை விட Establishment மிக பயங்கரமானதாக இருக்கிறது. இதைப் பற்றிய முழுமுச்சான செய்திகள் நாம் படிக்கும் செய்தித்தாள்களில் இடம் பெறும் 'தகுதி' பெறுமா என்று தெரியவில்லை, அதனாலேயே ஒரு கவன ஈர்ப்பாக இருக்கட்டுமே என்று இருண்ட பக்கங்களை எழுதுகிறேன்.

பார்க்க - டி.என்.ஏ செய்தி

India Shining என்கிற தேசபக்தி பிரச்சாரத்தினை கையிலெடுத்து அதற்கு அரசு பணத்தினை வாரியிறைத்து வீட்டுக்கு போனார்கள் பி.ஜே.பியினர். அப்போது காங்கிரஸ் மிக சாதுர்யமாக, வேலை கிடைக்கலை, வருமானம் இல்ல என சொல்வது போல ஒரு விளம்பரத்தினை போட்டு கல்லா கட்டி ஆட்சியிலும் அமர்ந்தாகி விட்டார்கள். டெல்லியிலிருக்கும் இருக்கைககளில் மந்திர மாயாஜாலங்கள் இருக்கும் போலிருக்கிறது. பின்னே, பி.ஜே.பியினர் செய்த அதை தவறினை கொஞ்சம் ஸ்மார்ட்டாக, India@60 என்கிற பெயரில் நியுயார்க் நகரில் ஒரு பெரும் கூத்தினை 10 மில்லியன் டாலரில் [சுமார் 40 கோடி] அரசாங்கம் செய்து முடித்திருக்கிறது.

The $10-million mega promotional blitz of India@60 makes for an interesting story, The four-day marketing showcase, named IncredibleIndia@60, and abbreviated to India@60, had a singular purpose of promoting the country in the financial capital of the world. The branding campaign that began on 23 September was part of the 60th anniversary celebrations to commemorate Indian Independence. It was organised by the Ministry for Tourism and Culture, and the Confederation of Indian Industry (CII), an industry body.

இதில் என் கண்ணில் பட்ட ஒரு விளம்பரத்தின் வாசகம் தான் என்னை அதிர செய்தது "Ninety per cent of MNCs make a profit in India," screamed a billboard in the ultra-expensive Times Square advertising space, in a bid to project India as a favourable investment destination." இந்த நாட்டில் ஒரு பக்கம் ஏழை விவசாயிகளுக்கு ரு.9 வழங்க முடியாத அரசு, விபத்தில் இறந்துப் போன அப்பாவி பெண்களுக்கு நஷ்டஈடு தர வருடங்களை இழுத்தடிக்கும் அரசு, பிரச்சனைகளை உள்நோக்காமல் ராமரா, பாபரா, கருணாநிதியா, ஜெயலலிதாவா என பொறுப்பின்றி பேசி திரியும் ஊடகங்கள், இவைகளுக்கு நடுவில், இந்திய பெருமையினை நிலைநாட்ட நியுயார்கில் செலவு 40 கோடி ரூபாய்கள். எங்கே போகிறோம் நாம் ? அப்புறம் ஏன் நாடு முழுக்க ஏற்றத்தாழ்வுகள் வந்து, ஆயுத போராட்டம் நடக்காது ?

பார்க்க - பிஸினஸ் வேர்ல்டு செய்தி [அனுமதி தேவை]

Monday, June 04, 2007

முகமது பின் துக்ளக் - வெர்ஷன் 2.0

அன்புள்ள திரு. கருணாநிதிக்கு,

வணக்கம். என்னைப் போன்றவர்களை நீங்கள் மறந்திருக்கக்கூடும். என் பெயர் ரேஷன் அட்டையில் குடும்ப தலைவன் என்கிற முறையிலும், திமுக அரசு வரவேண்டும் என்கிற ஆதங்கத்தோடு உங்கள் தலைமைக்கு ஒட்டுப் போட்டவன் என்கிற முறையிலும் சில விஷயங்களை உங்களுக்கு சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். என்னைப் போன்றவர்களுக்கான ஊடகங்கள் அனைத்தும் முற்றுப்பெற்றமையால் [ஒன்று உங்களுக்கு ஜால்ரா அடிக்கின்றன அல்லது வாய் மூடி இருக்கின்றன] இங்கே எழுத வேண்டிய கட்டாயாமாகிறது.

நீங்கள் வெற்றி பெற்ற உடனேயே உங்களுக்கு ஒரு மடல் எழுதி அதை பதியாமல் வைத்திருந்தேன். அதில் முக்கியமாய் எழுதியது உங்கள் பேரன்களை கொஞ்சம் கவனமாய் பார்த்துக் கொள்ளுங்கள் என்று. ஆனால், நீங்களோ, உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் பேரன்களையே ஒரங்கட்டி, உங்கள் வாய்மையால் ஊர் வாயினை அடைக்க முயற்சித்து, கொண்டிருக்கிறீர்கள். பாவம், உங்களுக்கு இன்னமும் பழைய நிலை, முரசொலியில் உங்களுக்கு பிடிக்காதவர்களை ஒரங்கட்டி, கட்டம் கட்டினால், உலகத்திற்க்கே பிடிக்காமல் போனது அந்தக் காலம். காலம் மாறிவிட்டது ஐயா.

காவிரி விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம், நடுவண் அரசினை நிர்பந்திக்க முடியாது என்று காரணம் கூறிவிட்டு, உங்களுக்கு மாற்றாக ஒரு மேலாண்மை மையம் உருவாகிடப்போகிறது என்கிற பயத்தில் ஒரே நாளில் இந்தியாவில் மேன்மையான அமைச்சர்களுள் ஒருவராக விளங்கிய உங்கள் பேரனை நீக்கச் சொல்லி வற்புறுத்தி, இப்போது உங்கள் மகளை எம்.பியாக்கி இருக்கிறீர்கள். தயாநிதி மாறனை அமைச்சராக்கும்போது நீங்கள் சொன்னதாக சொன்ன வாக்கியம் இன்னமும் நினைவில் இருக்கிறது. அவருக்கு நன்றாக ஹிந்தி பேச தெரியும், அதனால், அவர் நல்ல தொடர்பினை மாநில-மத்திய அரசினிடையில் ஏற்படுத்துவார் என்று. டி.ஆர். பாலு போன்ற மூத்த அமைச்சர்கள் இருக்கும்போது, எல்லா தகவல்களும், தயாநிதி வழியாக வரட்டும் என்று சொன்னீர்கள். இன்றைக்கு தயாநிதிக்கு ஹிந்தி செலக்டிவ் அம்னீஷியாவில் மறந்துப் போய் விட்டதா ? உங்களுக்காக தேவைப்பட்ட போது, தயாநிதி திமுகவின் முகமூடி, இப்போது அதிகாரத்தினை கையிலெடுத்துக் கொண்டு ஆட்டமாடும் அகம்பாவம் கொண்டவர். கனநேரத்தில் காற்றோடு போய்விட்டது உங்களுடைய தாத்தா-பேரன் உறவுகள், உங்கள் குடும்பத்தினர் முன்பு. சன் டிவி செய்தி பிரிவில் இருந்த ஒரு நண்பர், உங்களைப் பற்றிய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், உங்களை ஜெயலலிதா ஆட்சியில் சிறையிலடைத்தப் போது, சன் டிவி பட்ட கஷ்டங்களையும், அதையும் தாண்டி மன உறுதியோடு கலாநிதி மாறன் உங்களுக்காகவும், ஒட்டு மொத்த திமுகவிற்குமாய் துணிந்து செயல் பட்டதையும் விரிவாக விளக்கினார். உங்களுக்கு தெரிந்திருக்கக்கூடும், வெறும் மேரி பிஸ்கெட்டும் தண்ணீரோடும், உங்களுக்காக, தமிழகத்தையே உங்கள் மீது திரும்ப வைத்தவர்கள் அவர்கள். போகட்டும் விடுங்கள். கனிமொழி நன்றாக பேசுவார் என்கிறீர்கள். உங்கள் கட்சியில் வெற்றிகொண்டான் என்றொரு பேச்சாளன் முப்பது வருடங்களாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று சகட்டுமேனிக்கு பேசியவர் இருக்கிறார். ஓவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும், வெற்றிகொண்டான் வெளியில் இருந்ததை விட ஜெயிலில் இருந்தது அதிகம். அவருக்கென்ன செய்யப் போகிறீர்கள் - பேசுவது மட்டுமே எம்.பியாவதற்கான தகுதியென்றால் ? விடுங்கள். அது உங்கள் குடும்ப பிரச்சனை.

சில மாதங்களுக்கு முன்பு வண்டலூர் தாண்டி துணை நகரம் அமைக்கப்படும் என்றொரு அறிவிப்பினை வெளியிட்டீர்கள் ? வெளியிட்ட உடனேயே உங்கள் கூட்டணியில் இருக்கக்கூடிய பா.ம.க பிரச்சனை செய்ய, இரண்டாவது நாளே அதை கை கழுவி விட்டீர்கள். ஒரு அரசு எடுக்கக் கூடிய முடிவு என்பது, பல்வேறு காரணங்களைப் பார்த்து, வகைப்படுத்தி, பிறகே ஒரு உத்தரவினையோ, முடிவினையோ எடுக்க முடியும். எடுக்க வேண்டும். எடுத்தேன், கவிழ்தேன் என்று ஆள்வதற்கு பெயர் அரசாட்சியல்ல. மன்னராட்சி. ஆனால், நீங்களோ, உங்களின் கூட்டணி கட்சியில் குரலுக்காக சென்னை போன்ற ஒரு மாநகரத்தின் மிக முக்கியமான ஒரு தேவையினை சர்வசாதாரணமாக ஒரங்கட்டிவிட்டீர்கள். இந்த மாநகரத்தில் பிறந்ததிலிருந்து வசித்துவரும் என்னைப் போன்றவர்களுக்கு, அது ஒரு பேரிடி. சரி என்னைப் போன்ற மடையர்கள் 6 கோடி மக்கள் தொகையில் கொஞ்ச பேர் தான், இதை விடுங்கள்.

6 மாதங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் போகும் எல்லோரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற ஒரு உத்தரவினை நீதிமன்றம் வழியாக சொன்னீர்கள். 6 மாதம் போய், அரக்க பரக்க, மே 29/30/31 தேதிகளில் தங்கள் குடும்பத்தினையே இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லும் நடுத்தர வர்க்கத்தினர்கள் குடும்பத்திற்கு மூன்று, நான்கு ஹெல்மெட்கள் வாங்கினார்கள். பண வாசனை தெரிந்த முதலாளிகள், ரூ.300 ஹெல்மெட்டினை ரூ.500-கும் ரூ-800க்கும் விற்றார்கள்.ஜூன் 1 அன்றைக்கு சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஜூன் 2-ஆம் தேதி நீங்கள் ஒரு அறிக்கை வெளியிடுகிறீர்கள், ஹெல்மெட் அணிவதினை நிர்பந்திக்கக்கூடாது என்று. என்ன நடக்கிறது இங்கே. நேர்மையாய் சட்டத்தினை மதித்து ஹெல்மெட் வாங்கிய அனைவரையும் முட்டாள்ளாக்கி விட்டீர்கள். ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தினனுக்கு ரூ.1500 - 2000 என்பது பெரிய தொகை, அவனுடைய சம்பளத்தில் அது 20% மேல். இப்போது ஹெல்மெட் இல்லாமலும் வண்டியோட்டலாம் என்று சாதாரணமாய் சொல்கிறீர்கள். இது முழு நம்பிக்கை துரோகம். முதலாளிகள் வாடிக்கையாளர்களை பல்வேறு வார்த்தைகள் பேசி ஏமாற்றுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு அரசாங்கமே, குடிமக்களை ஏமாற்றுவதை இப்பொதுதான் பார்க்கிறோம். எவ்வளவு பெரிய இழப்பு இது. இரட்டை நாக்கு என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம், எதிர் கட்சிகளையும், எதிரி கட்சிகளையும் முரசொலியில் கட்டம் கட்டிய தாங்கள் செய்வது என்ன ? நேர்மையாய் இருப்பதின் பலன், ஏமாளியாய், இளிச்சவாயனாய் இருப்பதா? ஹெல்மெட் என்ன தங்கநகையா, இல்லாமல் போனால், அடகு வைத்து குடும்பம் நடத்துவதற்கு. உங்களை நம்பி ஒட்டுப்போட்ட மக்களுக்கு உங்களாலான பலன் ரூ.2000 நஷ்டம். சரி இதையும் விட்டு விடுமோம்.

மூன்று அப்பாவி உயிர்கள் உங்கள் மகனின் ஆதரவாளர்களால், கொல்லப்பட்டதற்கு, நான் என்ன ரெளடியின் அப்பனா என்று சீறுகிறீர்கள். சிபிஐக்கு உத்தரவிட்டேன் என்று கூறி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறீர்கள். உங்களது பவளவிழாவிற்கு ராஜ் தொலைக்காட்சியினை வரவழைத்து, அவர்களுக்கு நேரடியான தொலைதொடர்பு வசதிகள் இல்லாத காரணத்தினால், தூர்தர்ஷனின் வேனினை வாங்கி வைத்துக் கொண்டு வர்ணஜாலம் காட்டிய உங்களுக்கு, சிபிஜக்கு உத்தரவிடுவதா பெரிய விஷயம்.

சன் தொலைக்காட்சி இல்லையென்றானதும், திமுக அரசும், ராஜ் தொலைக்காட்சியும் சேர்ந்து 'கலைஞர் டிவி' நடத்தும் என்று அறிக்கை வெளியிடுகிறீர்கள். நீங்கள் தேர்தல் கமிஷனில் கொடுத்த கட்சியின் நிதி அறிக்கையினையும், இப்போது ஒரு தனியார் தொலைக்காட்சிக்காக முதலீடு செய்யப்போகும் தொகையினையும் உங்களால் ஈடு கட்ட முடியுமா ? விவரமறிந்த ஊடகங்களில் இருக்கும் என் நண்பர்கள் 50 -100 கோடி ரூபாய்கள் வேண்டும் என்று சொல்கிறார்கள். இது திமுக அரசியல் கட்சியின் டிவியா ? அப்படியென்றால், 50 கோடி ரூபாய்கள் திமுகழகத்திற்கு எங்கிருந்து வந்தது ? இல்லை இது உங்கள் குடும்ப நபர்களின் முதலீட்டில் வெளியிடப்படும் தொலைக்காட்சியா ? அப்படியேயென்றாலும், 100 கோடி ரூபாய்களுக்கு சொந்தமானவர்கள் யார் யார் ? அப்பாவி தமிழனுக்கு 'சிவாஜி' உரிமையினை 4 கோடி ரூபாய்க்கு வாங்கிவிட்டீர்கள் என்று சொல்கிறீர்கள். 4 கோடி ரூபாய்கள் என்பது மென்பொருள் புத்தியில் ஊறிப் போன என்னைப் போன்ற மரமண்டையர்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள். ஒரு படமே ஒரு மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கினால், அத்தொலைக்காட்சியினை நிர்வகிக்க எங்கிருந்து வந்தது பணம் ? இதில் கல்லா கட்டியவர்கள் ராஜ் உரிமையாளர்கள். நல்லது அதுவும் போகட்டும்.

விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்ட மீனவர்கள் என்கிற ஒற்றை சொல்லாடலிலும், அவர்கள் திரும்பி வந்த பின் ஒரு ஊடகத்திற்கும் அவர்களின் பேட்டியினை தராமல், அவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கும் என்று ஒரம்கட்டி நடுவண் காங்கிரஸ் அரசிற்கு உங்களின் விசுவாசத்தினை நிரூபித்து விட்டீர்கள். மனதினை தொட்டு சொல்லுங்கள், இன்றளவும், என்றைக்காவது புலிகள் உங்களையோ, இல்லை தமிழகத்தில் ஆளுபவர்களையோ பகைத்துக் கொண்டார்களா ? தமிழீழம் கிடைத்தால் சந்தோசமடைவேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், தொடர்ச்சியாக புலிகளை ஒரங்கட்டி வைத்திருக்கிறீர்கள். உலகில் இலங்கை பிரச்சனையினை கவனித்து வரும் குழந்தைக்குக் கூட தெரியும், புலிகள் இல்லாத ஈழம் சாத்தியமற்றது என்று. உங்களின் அரசியல் லாபத்திற்காக, ஏன் தமிழ், தமிழன் என்று ஜல்லியடிக்கிறீர்கள். நாளை ஈழம் மலர்ந்தவுடன் நீங்கள் ராஜ் டிவி நிறுவனர்களுக்கு சொன்னது போல, நாங்கள் வெகு காலமாக களவியல் காதலில் முழ்கி இருந்தோம் என்று உங்களை முன்னிறுத்திக் கொள்வீர்களா ?

திடீரென அதிமுக கட்டிடம் இடிக்கப்படும் என்று உங்கள் மகன் மேற்பார்வையில் இருக்கும் CMDAவிலிருந்து ஒரு அரசாணை வருகிறது. இதற்கு ஜெயலலிதா அம்மையார் சபதம் போட்டது, அறிக்கை விட்டது எல்லாம் வேறு விவாதம். 1972-இல் கட்டப்பட்டு, கிட்டத்திட்ட 35 வருடங்களாக இருக்கும் ஒரு கட்சியின் அலுவலகம் எப்படி திடீரென விதிகளை மீறியதாகும். அப்படியே விதிகளை மீறி கட்டப்பட்டது என்றே வைத்துக் கொள்வோம், கொஞ்சம், என்னுடைய அலுவலகத்திற்கு பின்னாடி இருக்கும் வடக்கு உஸ்மான் சாலைக்கு வாருங்கள். போத்தீஸ், நல்லீஸ், சரவணா, ஜெயசந்திரன், ஜி.ஆர்.டி, ஆரெம்கேவி என வரிசையாய் கட்டிடங்கள். வண்டி நிறுத்த கொஞ்சமும் இடமில்லாத வகையில் தொடர்ச்சியாய் நெரிசலை உண்டாக்கக் கூடிய கட்டிடங்கள். இவையெல்லாம் விதிமுறைகளை மீறவில்லையா ? ஏன் வருடக்கணக்கில் எதுவும் மாறவில்லை. கேட்டால், நீங்கள் புள்ளிவிவரப்புலியாய் மாறி 'சென்ற ஆட்சியிலே...... கழக ஆட்சியிலே' என வாய்ப்பந்தல் போடுவீர்கள். நீங்கள் சொல்லும் புள்ளிவிவரங்களில் பெரும்பாலானவை மக்களின் பார்வைக்கு இல்லை. ஆகவே நீங்கள் தப்பித்து விடுவீர்கள். இதைத் தாண்டி, கழகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி என்று வசைப்பாடிய நீங்கள், எப்படி இப்படியொரு விஷயத்தினை கையிலெடுத்து பேச முடியும்.

ஒரு பத்திரிக்கைப் பேட்டியில் "எம்ஜிஆரை நம்பினேன், கவுத்தான். வைகோவை நம்பினேன் கவுத்தான். சரி உள்ளுக்குள்ளேயே இருக்கட்டுமேன்னு பேரனுக்கு குடுத்தேன், அதுவும் சரியில்லை, நான் யாரைதான் கட்சியை பாதுக்காக்க நம்பறது, அதுதான் குடும்பத்திலிருந்தே பார்க்கறேன்" என்கிற ரீதியில் நீங்கள் சொன்னதாய் படித்தேன். இதை நம்பினேனா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, இவ்வாறு பேசக் கூடிய நபர்தான் நீங்கள் என்பதும் [நினைவிருக்கிறதா, நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! - எமர்ஜென்சிக்கு பிறகு] தெரிந்ததே.இதில் புரியாதது, எப்படி ஒரு ஜனநாயக கட்சியில் கட்சியினை நிர்வகிக்கும் பொறுப்பும், பாதுகாவலும், உங்கள் குடும்பத்திற்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறீர்கள். டெல்லியில் அழகிரியினை ப் பற்றி பேச்சு வருகையில், "அவன்தான் கொன்னான்னு நீ பாத்தியா ? " என்று சீறி இருக்கிறீர்கள். நீங்கள் பார்த்தீர்களா, மூன்று மாணவிகளை பக்கத்திலிருந்து எரித்தததை ? மதுரை முழுக்க தெரியும் அழகிரி அவர்களது ஆளுமை. அந்த மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டதன் காரணமும், ஒரு அலுவலகம் சீரழிக்கப்பட்ட காரணமும். பாசம் கண்களை மறைக்கிறதா ஐயா ? இந்த வார குமுதம் பேட்டியில் வைரமுத்துவின் கேள்வி பதிலில் நீங்கள் "தசரதனுக்கு கீரிடம் வந்த போது தானே, கேடு வந்தது" என்று சொன்னதாக மனமுருகியிருக்கிறார் கவிஞர். பிரச்சனை கீரிடத்தில் மட்டுமல்ல, கட்டிக் கொண்டவர்களின் தொணதொணப்பும் தான். அவுட்லுக் எக்ஸ்பிரஸில் உங்களுடைய குடும்ப கிளை படம் போட்டிருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார். உண்மையில் பிரச்சனை அங்கேயிருந்து தான் தொடங்கியிருக்கிறது. கொஞ்சம் திமுகவின் வரலாற்றினை திரும்பி பாருங்கள். பெரியார் மணம் செய்து கொண்டது தெரிந்து, அண்ணா முதற்கொண்ட ஐம்பெரும்குழுவினர் ஒரு இயக்கும் ஒரு குடும்பத்தின் பிண்ணணியில் போய்விடக் கூடாது என்கிற தார்மீக அடிப்படையில் வெளியில் வந்து தொடங்கியது தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் இன்றோ உங்கள் குடும்பத்தினருக்காகவும், அவர்களின் செட்டில்மென்டிற்காகவும் திமுகவினை திருக்குவளை கருணாநிதி குடும்பத்தினர் முன்னேற்றக் கழகமாக மாற்ற துடிப்பது 20 வருடங்களாக, திராவிட பாரம்பரியத்தோடும், உங்களின் தலைமையோடும் இருந்து வந்த என்னைப் போன்றவர்களுக்கு வருத்தத்தையும், வெறுமையையும், வெறுப்பினையும் உண்டாக்கியிருக்கிறது.

84 வயதில் இன்னமும் உங்களை கர்வத்தோடும், பிரம்ம்பிப்பொடும் பார்க்கிறேன். ஆனால், செயல்கள் உயராத போது, சொற்பேச்சு உயர்ந்து என்ன பயன். என்னை போன்றவர்கள் உங்களின் அரசியல் அனுபவத்தில் 50 விழுக்காடுக் கூட வாழாதவர்கள். ஆனாலும், செயல்களைக் கொண்டே ஒருவரின் நிலையினை எடையிட இயலும் என்கிற நிலையில் உங்களின் செயல்களுக்கும் வயதிற்கும் சம்பந்தமில்லை. முகமது பின் துக்ளக்கினையொட்டிய வகையில் உங்கள் முடிவுகளும், நிலைப்பாடுகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன.உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. குறளோவியம் கண்டவர் நீங்கள், அதிலிருந்து ஒரு குறள்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பதி ழுக்கு.

இன்னமும் திராவிட இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவன்.