Thursday 23 July 2009

நாடோடிகள் - சில பகிர்வுகள்



நாடோடிகள் - சில பகிர்வுகள்



வெகு நாட்களுக்கு பிறகு தூத்துக்குடியில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க சென்றிருந்தேன். கூட்டம்
நிரம்பி வழிந்தது. படம் ஆரம்பித்து ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறந்தது. இவ்வளவு ஆரவாரமும் 
உற்சாகமும் படம்பார்ப்பவர்களிடம் தொற்றிக்கொண்ட காரணம் என்ன என்று எண்ணியபோது கிடைத்த விடைகள் இரண்டு.
ஒன்று நட்பு. மற்றொன்று சுப்பிரமணியபுரத்தின் வெற்றிநாயகன் சசிக்குமார். சசிக்குமார் தோன்றும் காட்சிகளிலும் நட்பை
பற்றி அவர் பேசும் வசனங்களின்போதும் தியேட்டர் அதிர்கிறது.

காதலால் நட்பிற்கு ஏற்படும் வலியையும்,இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத பக்கங்களையும் திரையில்
செதுக்கியதற்காகவே இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

வெயில்,பருத்திவீரன்,சுப்பிரமணியபுரம்,பூ,பசங்க வரிசையில் நாடோடிகளும் தனித்து நிற்கும் ஒரு திரைப்படம்.
வெகு இயல்பான யதார்த்த நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள் ஒவ்வொரு நடிகர்களும்.
எப்பொழுதும் எதையாவது தின்று கொண்டே இருக்கும் கதாநாயகி,டிசர்ட்டும் தாவணியும் அணிந்தலையும்
கதாநாயகனின் தங்கை,மகனின் காதலுக்கு உதவும் அப்பா,நான்கைந்து கைத்தடிகளுடன் சுற்றித்திரியும் உள்ளூர்
மைனர்,அரசாங்க வேலை மேல் உயிரையே வைத்திருக்கும் கதாநாயகியின் அப்பா,உள்ளாடையை அசால்டாக
தலையில் கவிழ்த்துக்கொண்டு பிச்சு உதறி இருக்கும் 'பாண்டி', சித்தி முன்பு அடித்துவிட்டு அவர் சென்ற பின் கலங்கி துடிக்கும் பாண்டியின் அப்பா, காதலுக்கு மிக முக்கிய உதவி செய்யும் "பைக்" நண்பனின் மெளனம்(ஒரு வார்த்தைகூட பேசாமல் எப்போதும் சுயீங்கம் மென்று கொண்டிருப்பார்),கதாநாயகனின் பாட்டி,படத்தின் முக்கிய காட்சிகளில் ஒலிக்கும் 'சிவசம்போ' இப்படி படம் முழுவதும் நிறைகளையே தாங்கி நகர்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஏதேனும் ஒருவகையில் மனதோடு நெருக்கமாகிவிடுகிறார்கள். 

முதல் பாதியில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் நாடோடிகள் இடைவேளைக்கு பிறகு மனதை பிழிந்துவிடுகிறார்கள். கதாநாயகியை பிரியும் தருணத்தில் அவர் அப்பாவிடம் "உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு மாமா" என்று சொல்லும்போதும்
"நீ வலிச்சாலும் வலிக்கலன்னுதாண்டா சொல்வ" என்று பாண்டி சொல்லும் காட்சியிலும் கலங்க வைத்துவிடுகிறார் சசி.

கிளைமாக்ஸில் "தமிழ்சினிமா"வாகி விடுவார்களோ என்கிற பயத்தை அடித்து நொறுக்கி ஒரு புன்முறுவலோடு நம்மை
வழி அனுப்புகிறார்கள்.

நாடோடிகள் - ஒவ்வொரு நண்பனும் பார்க்கவேண்டிய திரைக்காவியம் - சமுத்திரக்கனிக்கும் அவர் குழுவிற்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும்,நன்றிகளும்.

--