Friday, 30 January 2009

இலங்கையில் தமிழர்கள் படுகொலை- முத்துக்குமார் தீக்குளித்து மரணமடைந்தார்

சென்னை 29, ஜனவரி: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, சென்னையில் முத்துக்குமார் (வயது 26) என்ற இளைஞர் இன்று தீக்குளித்து மரணமடைந்தார்.

இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது... இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று கூறியபடியே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் முத்துக்குமார் இன்று காலை 11 மணியளவில், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

படுகாயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை - கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்த முத்துக்குமார், மாத இதழ் ஒன்றில் பணியாற்றி வந்தவர். இவரது சொந்த ஊர், திருச்செந்தூர் அருகிலுள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர்.

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...

Monday, 26 January 2009

என் அம்மாயி

கொங்கு நாட்டு பக்கம் அம்மாவின் அம்மாவை அம்மாயி என்று அழைப்பது வழக்கம் . அது போல தான் என்னக்கும் அம்மாயி . எப்பவுமே என் அம்மா யின் மீது எனக்கு ஒரு பாசம் உண்டு . என் அம்மாயி என் அப்புச்சி (அம்மாவின் அப்பா)இய விட 7 அல்லது 8 வயது இளையவள் . என் அப்புச்சிக்கு உபசரிப்பதில் அவங்களை விட்டால் வேறு ஒருவர் கிடையாது . அப்புச்சி எப்பவும் அம்மையை திட்டி கிட்டே இருப்பார்கள் . இருந்தாலும் அம்மாயி சலிக்காமல் அப்புச்சி சாகும் வரை பார்த்து கொண்டார்கள் . எனக்கு என் அம்மையின் விறகு அடுப்பு ரொம்ப பிடிக்கும் . நான் ரொம்ப சின்ன பையனா இருக்கும் போது அங்கே போஅவீன் அப்போது குளிர் காலங்களில் அவர்களின் விற்கு அடுப்பில் கருப்பு காபி காய்ந்து கொண்டு இருக்கும் . அதில்குளிர் காய்ந்து கொண்டேபட்ட கருப்பு காபி குடிப்பது ஒரு சுகமான அனுபவம். அந்த காலத்து மனுசங்களுக்கு உரிய எதார்த்தம் அம்மாயி வயசு கில்ழவிகளிடம் எப்பவும் இருக்கும் . என் அம்மையிடமும் அது நெறையவே இருக்கும் . என் அம்மாயி எப்பவும் காசு சம்பாதிக்கணும் அதை அப்படீயே சேமித்து அடுத்த தலைமுறைக்கு வேயக்கணும் இன்னு நினைப்பார்கள். அவர்களது சாப்பாடு கூட ஒரு பெரிய அளவில் இருக்காது . பழைய சோறும் தயிரும் இருந்தா பச்சை மிளகாய் கடிச்சு சாப்படை முடிச்க்கு வாங்க. வயக்காட்டில் கடுமையான வேலை இருக்கும் போது கூட அப்படி இருப்பார்கள் ரொம்பவும் கடின உழைப்பாளிகள் . அதனால் தான் இவளவு வயசிலும் ஓரளவு நல்ல ஆரோகியமா இருந்து வேலை செய்ய முடிஞ்சது . அம்மையின் ரத்த கொதிப்பு இக்கும் காரணம் என் சின்ன மாமாவின் இளவயது இறப்பு காரணமா இருந்து இருக்கும் இன்னு நினைக்கிறேன் . மாமா குடிச்சு போதையில் அலைவதை பார்த்து அவர்கள் ரொம்ப வருத்த படுவதி பார்த்து இருக்கிறேஅன் . அவர்களது இறப்பு என் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாய் என்னுகிறேஅன்.

ஏன் இன்னஆ என்னோட பிறப்பு மற்றும் வளர்ப்பு ஆகியவற்றில் அம்மையின் பங்கு என் அம்மா விக்கு அடுத்தது. அந்த காலத்து வழக்கு முறைகள் பழக்க வழக்கங்கள் எல்லாம் அவர்களுடன் முடிஞ்சது இன்னு நேனைகிறேஅன் .

Thursday, 22 January 2009

விர்தியானா review by Tamil writer Ramakrishnan.

குறிப்பிட்ட சில இயக்குனர்களின் படங்களை மட்டுமே திரும்பத் திரும்ப பார்க்க முடிகிறது
 
லூயி புனுவலின் விர்தியானாவை (Luis Bu񵥬 ? Viridiana ) ----by Tamil writer Ramakrishnan.
 

Wednesday, 24 December 2008

ராஜீவ் கொலையாளியை நெருங்கிவிட்டோம்




ராஜீவ் கொலையாளியை நெருங்கிவிட்டோம்
Sunday, 12.21.2008, 08:50am (GMT)

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில், ஷ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர். 

91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையும்,  ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் சோனியாகாந்தியின் கருணையால் நளினியின் தூக்கு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

`ராஜீவ்காந்தி படுகொலைக்கு உண்மையான காரணம் என்ன?' என்று அறிவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகச் சொல்கிறார்கள். அந்த நேரத்தில்தான் ஒற்றைக்கண் சிவராசன், சுபா உள்பட சில குற்றவாளிகள் கடைசியாக ரங்கநாத்தின் வீட்டில் பதுங்கி இருந்ததால், அவருக்கு இந்தப் படுகொலையின் நிஜப் பின்னணி தெரிய வாய்ப்புள்ளது என்று சோனியாகாந்தி உறுதியாக நம்பியிருக்கிறார். ஏனென்றால், படுகொலைச் சம்பவம் நடந்தபிறகு, பெங்களூருவில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த 21 நாட்களும் அவர்களைச் சுற்றி நடந்த பல்வேறு விஷயங்கள் சோனியாவின் கவனத்திற்குப் போயிருக்கின்றன. இதையடுத்து, ரங்கநாத்தைச் சந்திக்க சோனியா விருப்பப்பட்டிருக்கிறார்.

அதன்பேரில், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான தமிழ் உணர்வாளர் (முன்பு காங்கிரஸில் பொறுப்பு வகித்தவர்) ஒருவர் மூலம், தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி. ஒருவர் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் எனவும் தகவல்கள் உலா வருகின்றன. டெல்லியில் நடந்த இந்த `ரகசிய சந்திப்பில்' படுகொலையின் முக்கியமான விஷயங்களை சோனியாவிடம், ரங்கநாத் கூறியதாகவும் சொல்கின்றனர். தற்போது சிறையில் உள்ள `ராஜீவ் கொலையாளிகள் வெறும் கருவிகள்தான்' என்ற மனநிலைக்கு சோனியா மாறியதற்கும் ரங்கநாத்தின் சந்திப்பைத்தான் முக்கியமானதாகக் கூறுகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். இந்தச் சந்திப்பு குறித்து இதுவரை சோனியாவோ, ரங்கநாத்தோ  மீடியாக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. சோனியாவும், `எனது கணவர் கொலையில் தொடர்புடையதாகச் சொல்லப்படுபவர்களை தூக்கில் போட எமக்கோ, எமது குழந்தைகளுக்கோ சிறிதும் விருப்பமில்லை' என தனது நிலையைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

ஆனாலும், இங்குள்ள காங்கிரஸ் பிரமுகர்கள், `ராஜீவ் கொலையாளிகளை ராஜீவ்காந்தியின் ஆவியே மன்னித்தாலும், நாங்கள் மன்னிக்க மாட்டோம்'  எனக் குரல் கொடுக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், `சோனியாவிடம் பெங்களூரு ரங்கநாத் பேசியது என்ன? சோனியா கேட்ட கேள்விகள் என்ன? அவரது பதில்களுக்கு ராஜீவ்காந்தியின் மனைவியாக சோனியாவின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது?' என்றெல்லாம் இயல்பாக எழும் கேள்விகளுக்கு விடைதேடி ரங்கநாத்தைச் சந்திக்க முயன்றோம். பலநாட்கள் முயன்றும் ரங்கநாத் எங்கே இருக்கிறார்?  என அறிய முடியவில்லை. ஒருகட்டத்தில் நாம் ரங்கநாத்தை தொலைபேசியில் பிடிக்க, நம்மிடம் பேசிய அவர், "நீங்கள் என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கேள்விப்பட்டேன். எல்லா விஷயங்களையும் மறந்துவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் நிம்மதியாக இருக்கிறேன். இருந்தாலும் சோனியாவின் சந்திப்பில் பேசப்பட்ட  பல உண்மைகளை இதுவரை எந்த மீடியாவுக்கும் நான் தெரிவிக்கவில்லை. உங்களது தேடுதல் முயற்சிக்காக நான் பேச விரும்புகிறேன். வாருங்கள்'' என கிரீன் சிக்னல் கொடுக்க, அவரை நாம் நேரில் சந்தித்துப் பேசினோம். இனி ரங்கநாத் பேசுகிறார்...

"அப்போது நான் பெங்களூருவில் பசவண்ணன் குடியில் வசித்து வந்தேன். கார்த்திக் எண்டர்பிரைசஸ் என்ற கம்பெனியை நடத்தி வந்தேன். எனக்கு சிவாஜி நகரைச் சேர்ந்த ராஜன் என்பவர் நெருங்கிய நண்பராக இருந்தார். அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார். புலிகள் இயக்கம் அப்போது தடை செய்யப்படவில்லை. ராஜீவ்காந்தி படுகொலை நடந்தபிறகு, ஜூலை மாதம் 30-ம் தேதி ராஜன் என்னிடம், `ஒரு அவசர உதவி வேண்டும். எனது நண்பர்களுக்கு வாடகைக்கு வீடு வேண்டும்' என்றார். நானும் தொழில் சரியில்லாமல் சிரமத்தில் இருந்ததால் சம்மதித்தேன். பிறகு, ஆகஸ்ட் முதல் தேதி ராஜனிடம் இருந்து போன் வந்தது. நான் அவரைச் சந்தித்தபோது, சஞ்சய்வாணி பத்திரிகையைக் கையில் வைத்துக் கொண்டு, `சி.பி.ஐ. போலீஸார் ராஜீவ் கொலையாளிகளைத் தேடி பெங்களூரு வந்தபோது, குலத்தான், அரசன் என்ற இரண்டு புலிகள் குப்பி(சயனைடு) சாப்பிட்டு இறந்துவிட்டதாகச் செய்தி வெளியாகியிருந்ததை' என்னிடம் காட்டினார். பிறகு  `எனக்குப் பிரச்னையாக இருக்கிறது. உடனே வீடு வேண்டும்' எனக் கேட்டார். நானும் ஏற்பாடு செய்கிறேன் என்றபடியே வீட்டுக்குப் போய்விட்டேன்.

பிறகு ஆகஸ்ட் 20-ம் தேதி சிவாஜி நகரில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்திற்கு வருமாறு ராஜன் அழைத்தார். அங்கேயும் `நண்பர்களுக்கு வீடு வேண்டும். ஏற்பாடு செய்து விட்டாயா?' என்று கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் பச்சை நிற ஜிப்சி வண்டி ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய சுரேஷ் மாஸ்டர், டிரைவர் கீர்த்தி(இவர் பெயர் கீர்த்தி என பின்னர்தான் தெரியவந்ததாம்), இன்னொரு டிரைவர் ஆகியோர் ராஜனிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அந்த வழியாக போலீஸ் வாகனம் ஒன்று போக, உடனே என்னிடம் திரும்பிய சுரேஷ் மாஸ்டர் துப்பாக்கியைக் காட்டி, `நாங்கள் வருவதை போலீஸில் சொன்னாயா?' என மிரட்டியவாறு, ராஜனைப் போகச் சொன்னார். என் கண்ணில் துணியைக் கட்டினார். வண்டி கிளம்பும்போது சுரேஷ் என்னிடம், `தமிழ்நாட்டில் பிரச்னை தீவிரமாகிவிட்டது. நாங்கள் இலங்கைத் தமிழர்களுக்காகத்தான் போராடி வருகிறோம். கோடியக்கரை சண்முகத்தை விசாரணை என்ற பெயரில் சி.பி.ஐ. போலீஸார் தூக்கில் போட்டுக் கொன்றுவிட்டார்கள். அவர் தற்கொலை செய்ததாகக் கதைகட்டி விட்டார்கள். நாங்கள் அங்கு இருந்தாலும் இதுதான் நடக்கும் என்பதால் இங்கு வந்திருக்கிறோம். தாற்காலிகமாகத்தான் உங்கள் வீடு தேவை' என்றார்.

பிறகு எனது வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தினர். கண்கட்டை அவிழ்த்துவிட்டுப் பார்த்தபோது, `இவர்களுக்கு எப்படி என் வீடு தெரியும்?' என ஆச்சரியப்பட்டேன். அவர்களும் கிளம்பிவிட்டார்கள். நான் இந்தச் சம்பவம் பற்றி என் மனைவி மிருதுளாவிடம் விவரித்துக் கொண்டிருந்தபோது, வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது அதிர்ந்தே போனேன். அங்கு சுரேஷ் மாஸ்டர், டிரைவர் கீர்த்தி, ஒற்றைக்கண் சிவராசன், சுபா என மொத்தம் ஆறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். சுபா கையில் பிஸ்டல் இருந்தது. என் மனைவி அதிர்ச்சியோடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சுபா என் மனைவியிடம், `போகும் வழியில் போலீஸ் ஜீப் சென்றதால் இங்கு வந்தோம். இலங்கையில் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் தமிழர்களை குறிவைத்துச் சாகடிக்கிறது. தமிழச்சிகளைக் கற்பழிக்கின்றனர்...' என ஏதேதோ பேசினார். அன்றிலிருந்து 21 நாட்கள் அவர்கள் என் வீட்டில்தான் தங்கினர். சுபாவுக்கு சமையல் நன்றாகத் தெரியும். இலங்கைப் புட்டு, கொழும்பு சமையல் என விதம்விதமாகச் செய்வார். அப்போதெல்லாம் சுபாவும், சிவராசனும், `செத்தாலும் இலங்கையில்தான் சாகணும்' என்பார்கள். நானோ, `நீங்கள் இருப்பது தெரிந்தால் எங்களுக்கும் பிரச்னை வரும். சீக்கிரம் போய்விடுங்கள்' என்போம்.

அப்போது இலங்கை சிங்களச் சண்டையில் அடிபட்ட 13 பேர் முத்தத்தி கோயில் காட்டுப் பகுதியில் ரகசியமாகச் சிகிச்சை பெற்று வந்தனர். வீரப்பனைத் தேடி காட்டுக்குள் அலைந்த அதிரடிப்படையின் கண்களில் இவர்கள் சிக்கிவிட்டார்கள். `போலீஸ் பிடித்துவிட்டது' என பயந்துபோன அவர்களில் ஒன்பது பேர் குப்பியைக் கடித்து சயனைடு சாப்பிட்டு இறந்துபோனார்கள். மற்றவர்கள் பிடிபட்டபோது, `சிவராசன், சுபா ஆகியோர் ரங்கநாத் வீட்டில்தான் பதுங்கியிருக்கிறார்கள்' என்ற தகவலையும் சொல்லிவிட்டார்கள். போலீஸ் தேடி வரும் தகவல் தெரிந்ததும், உடனே வீட்டில் இருந்த பொருட்களை கோணன்னகுண்ட என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு மாற்றினோம். இதுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு.

என் மனைவியும் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டார். அப்போது சிவராசன் தலைக்கு பத்து லட்சமும், சுபா தலைக்கு ஐந்து லட்சமும் விலை நிர்ணயித்து இருந்தார்கள். ஆகஸ்ட் 17-ம் தேதி எனது வீட்டை சி.பி.ஐ. போலீஸ், என்.எஸ்.ஜி. கமாண்டோ (தேசிய பாதுகாப்புப் படை), எஸ்.டி.எஃப். (அதிரடிப்படை) படை வளைத்திருந்தது. கமிஷனர் ராமலிங்கம், துணைகமிஷனர் கெம்பையா ஆகியோர் என் வீட்டின் எதிரில் முகாமிட்டிருந்தனர். நானும் இயல்பாக அங்கு செல்ல, `இவர்தான் ரங்கநாத்' என கூட்டத்தில் யாரோ சத்தம் போட்டுச் சொல்ல, அதிர்ந்துபோய் ஓட ஆரம்பித்தேன். அதற்குள் போலீஸார் என்னை வளைத்துப் பிடித்து, ஜெய்நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிச் சென்றார்கள். ராஜீவ் படுகொலையை விசாரிக்கும் எஸ்.ஐ.டி. (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம்) அதிகாரியும், சி.பி.ஐ. இயக்குனருமான கார்த்திகேயன் அங்கு வந்தார். பல கேள்விகளை என்னிடம் கேட்டார். பிறகு சிவராசனிடம் பேச்சுவார்த்தை நடத்த என்னை அழைத்துச் சென்றனர்.

எனது வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில், சரக்கு லாரி ஒன்று அப்பகுதி கால்வாயில் பெரும் சப்தத்துடன் மோத, போலீஸார் துப்பாக்கியால் எனது வீட்டை நோக்கிச் சுட ஆரம்பித்துவிட்டனர். இந்தத் தாக்குதலில் பாலாஜிசிங், ஜெய்சிங் உள்பட மூன்று போலீஸாருக்கு துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டது. வீட்டில் சிவராசன் குப்பியைக் கடித்தபடி நெற்றிப் பொட்டில் அவராகவே சுட்டுக் கொண்டு இறந்து கிடந்ததார். சுபா, கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர், ஜெமீலா(இந்தப் பெண் அங்கே எப்படி வந்தார் என்று தெரியவில்லை) எல்லாரும் சயனைடு சாப்பிட்டு இறந்துபோனார்கள். பிறகு என்னைப்  பத்துநாட்கள் சட்டவிரோத காவலில்சி.பி.ஐ. வைத்திருந்தது. எனக்கும், புலிகள் அமைப்புக்கும் உள்ள தொடர்பு பற்றி எந்த ஆதாரமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. என்னைக் குற்றவாளியாகச் சித்திரிக்க என் மனைவியையே எனக்கு எதிராக சாட்சி சொல்ல வைத்தனர்.

வழக்கு விசாரணைக்காக சென்னைக்கு என்னை ஹெலிகாப்டரில் கூட்டி வந்தனர். இந்தச் சம்பவத்தில் 56 பேரை போலீஸார் ரிமாண்ட் செய்தனர். செங்கல்பட்டு சிறையில் நான் இருந்தபோதுதான் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், பேரறிவாளன் உள்பட பலரைச் சந்திக்க முடிந்தது...'' என்றவர், தொடர்ந்து...

"சிவராசன் உள்ளிட்டவர்கள் தங்கியிருக்கும்போது நடந்த `ரகசியங்கள்' இதுவரை பரவலாக வெளியில் தெரியாது. அப்போது எஸ்.டி.டி. போன் பூத்துகள் பெரிய அளவில் இல்லை. சிவராசன், சுரேஷ் மாஸ்டர் ஆகியோர் எம்.ஜி. ரோட்டில் உள்ள காமதேனு ஓட்டலுக்கு போன் பேசுவதற்குச் செல்வார்கள். நான் நான்கு முறை அவர்களோடு போயிருக்கிறேன். ஒருமுறை பேசி முடித்ததும், `சந்திராசாமிக்குத்தான்(நரசிம்மராவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்) போன் செய்தோம். நாங்கள்சந்திராசாமியுடன் தமிழில்தான் பேசுவோம். அதை அங்குள்ள ஒருவர் அவருக்கு மொழி பெயர்த்துச் சொல்லுவார். இந்தக் கொலைக்கு(ராஜீவ்காந்தி) முக்கியக் காரணமே சந்திராசாமிதான். நேபாளம் வழியாக நாங்கள் தப்பிச் செல்ல அவர்தான் வழி உருவாக்கித் தரப் போகிறார்' என என்னிடம் சுரேஷ் மாஸ்டர் கூறினார். பின்னர் அவரே தொடர்ந்து, `முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பயிற்சி எடுத்தேன். அதன்பின் புலிகள் அமைப்பில் இருந்து விலகிவிட்டேன். எல்லாருக்கும் பொது எதிரியான ராஜீவைக் கொல்வதற்கு எங்களுக்கு சந்திராசாமிதான் உதவினார்' என்றார். நான் அதிர்ந்து போனேன். 

அப்போது சிவராசன் என்னிடம், `ஆறு மாதங்களுக்கு முன்பு ஹரித்துவாரில் உள்ள சந்திராசாமியின் ஆசிரமத்தில்

ராஜீவ்காந்தியைக் கொன்ற பெல்ட் பாம், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து மிகப் பெரிய யாகமே நடந்தது. யாகம் முடிந்ததும் சந்திராசாமி, `நீங்கள் தமிழ்நாட்டிற்குப் போகும் காரியம் பெரும் வெற்றி பெறும்' என வாழ்த்தினார். எனக்கு அதைப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது' என்றார் வேடிக்கையாக. நான் இந்த விஷயங்களையெல்லாம் சி.பி.ஐ. இயக்குனர் கார்த்திகேயனிடம் கூறியபோது, அவர் அதிர்ச்சியாக என்னிடம், `சந்திராசாமி தொடர்பு பற்றி உனக்கு எப்படித் தகவல் தெரியும்? இனி இதைப் பற்றி யாரிடமாவது கூறினால் கோடியக்கரை சண்முகத்தின் கதிதான் உனக்கும் ஏற்படும். ஞாபகத்தில் வைத்துக் கொள்' என மிரட்டியவர், கொஞ்சமும் தாமதிக்காமல் பேப்பர் வெயிட் ஒன்றை எடுத்து என் வாயில் பலமாக அடித்தார். அதில் ஒரு பல் உடைந்துவிட்டது. இரண்டு கால்களிலும் பலமாக அடித்தார். பலமான காயம் ஏற்பட்டுவிட்டது (காயத்தைக் காட்டுகிறார்).

இதில் சி.பி.ஐ. போலீஸார் என்னை பலிகடாவாக்குவது தெரிந்தது. இதேபோல் விஜயன், அவரது மனைவி செல்வலட்சுமி, நளினி உள்பட பலர் சிக்கியிருப்பதை அறிந்தேன். இவர்களெல்லாம் எந்த வகையிலும் இந்தச் சம்பவத்தில் தொடர்பில் இல்லாதவர்கள். கொலையில் ஈடுபட்டவர்களை நேரில் பார்த்திருக்கலாம். பேசியிருக்கலாம். ஆனால், கொலை செய்வதற்கான தகவல் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது. அதேபோல், தனது உறவினரின் குழந்தைகள் விளையாடும் பொம்மையில் போடுவதற்காக பேரறிவாளன் இரண்டு சிறிய பேட்டரிகளை வாங்கியிருந்தார். அதற்கான ரசீதை அவர் வைத்திருந்ததாகவும், பெல்ட் பாம் தயாரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அந்த வெடிகுண்டைத் தயாரித்தது அமெரிக்காவா, இலங்கையா என இதுவரை தெரியவில்லை. இந்தச் சம்பவத்தின் தலைமை விசாரணை அதிகாரி ரகோத்தமன், `பெல்ட் பாம் தயாரித்தது யார் என்றே தெரியவில்லை' என்று கூறியிருக்கிறார். இப்படி முரண்பாடான இந்த வழக்கில் பேரறிவாளன் இன்று வரையில் தூக்குத் தண்டனைக் கைதியாகவே சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கில் ஏ-26 ஆக நான் சேர்க்கப்பட்டேன். 98-ம் ஆண்டு மார்ச்சில் எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்தது. நான் உள்பட ஐந்து பேர் சென்னை சிறையில் அடைக்கப்பட்டோம். 99-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் விசாரணையில் எனக்கு விடுதலை கிடைத்தது. ஏழு பேர் தண்டனை உறுதி செய்யப்பட்டது!'' என்றவரிடம்,

`சரி.. விஷயத்துக்கு வருவோம். சோனியா காந்தியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது? என்ன பேசினீர்கள்? உங்களிடம் சோனியா என்ன கேள்விகளைக் கேட்டார்?' என வரிசையாகக் கேள்விகளை அடுக்கினோம்.

"மிகவும் ரகசியமாக நடந்த சந்திப்பு அது. இதுவரையிலும் இதைப் பற்றி நான் யாரிடமும் கூறியதில்லை. முதல்முறையாக உங்களிடம் கூறுகிறேன். 99-ம் ஆண்டு ஜனவரி மாதம், பத்தாண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட் என்னை விடுதலை செய்தது. பிறகு ஜூன் மாத வாக்கில், சோனியாகாந்தி என்னைச் சந்திக்க விரும்பும் தகவல் எனக்குக் கிடைத்தது. அதன்பேரில் சென்னையில் வசிக்கும் புலிகளின் ஆதரவுத் தலைவர் ஒருவர் வீட்டில் நான் இருந்தபோது, தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் உயர் பொறுப்பில் இருக்கும் `முக்கியமான' நபர் அங்கு வந்தார். அவர் என்னை டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். கூடவே மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகளும் வந்தனர்.

டெல்லி மவுரியா ஓட்டலில் என்னைத் தங்க வைத்தனர். உளவுப் பிரிவு அதிகாரிகள் எனக்குப் புதுத்துணி வாங்கித் தந்தனர். மறுநாள் காலை ஜன்பத் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அம்பாசிடர் காரில் நான் சென்றபோது, பின்னால் பதினைந்து செக்யூரிட்டி வாகனங்கள் எனக்குப் பாதுகாப்பாக வந்தன. காலை 7.45 மணிக்கு சோனியா வீட்டுக்குப் போனபோது கடுமையாகச் சோதனை செய்தனர். சோனியாவின் செயலாளர் வின்சென்ட் என்னிடம், அருகில் இருந்த பிங்கி என்பவரை அறிமுகப்படுத்தி, `இவர் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் பேத்தி. நன்றாக மொழி பெயர்ப்பார்' என்றார். நான் அவருக்கு வணக்கம் வைத்தேன். பிறகு சோனியாகாந்தி வந்து அமர்ந்தார். அவர் என்னிடம் ஏழு கேள்விகள்தான் கேட்டார்.

முதல் கேள்வியாக, `என் கணவருக்கும், உங்களுக்கும் ஏதாவது பிரச்னை இருந்ததா?' என்றார். நான், `அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. நான் பெங்களூருவில் இளைஞர் காங்கிரஸில் இருந்தவன். கூட்டத்தோடு கூட்டமாக டெல்லி வந்து இந்திராகாந்தியைச் சந்தித்திருக்கிறேன். ராஜீவ் மீதும் பெரிய மதிப்பு வைத்திருக்கிறேன்' என்றேன்.

இரண்டாவதாக, `உங்கள் வீட்டில் சிவராசன், சுபா உள்ளிட்ட குற்றவாளிகள் தங்கியிருந்தபோது, படுகொலை செய்வதற்கான காரணம் பற்றி ஏதாவது பேசினார்களா?' எனக் கேட்க, நானும், `அவர்கள் என்னிடம் பேசியவரை ஐ.பி.கே.எஃப். (அமைதிப்படை) இலங்கையில் செய்த அட்டூழியங்களைப் பற்றிப் பேசினார்கள். அதன் எதிரொலியாகத்தான் சம்பவம் நடந்திருக்கிறது என்றனர். சந்திராசாமிக்கும் இதில் தொடர்பிருக்கிறது என அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து தெரிந்து கொண்டேன்' என்றேன்.

மூன்றாவதாக, `இதைப் பற்றி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சொன்னீர்களா?' என்றார். `அவர்களிடம் இந்த உண்மைகளை விரிவாக எடுத்துரைத்தேன். அதற்காக அடிதான் விழுந்தது. இயக்குனர் கார்த்திகேயன் எனது பல்லை உடைத்தார். சுட்டுக் கொல்வதாகவும் மிரட்டினார்' என்றேன்.

நான்காவதாக, `தமிழ்நாடு அரசியல்வாதிகளுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பிருக்கிறதா?' என்றார். `எனக்குத் தெரியாது. நான் கவனித்த வரையில் அப்படிப்பட்ட தொடர்புகள் இருப்பதாகத் தெரியவில்லை' என்றேன்.

ஐந்தாவது கேள்வியாக, `பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்ப்பதைவிட்டுவிட்டு ஏன் படுகொலை செய்தார்கள்?' என்றார். `அதுதான் எனக்கும் தெரியவில்லை' என்று நான் சொன்னபோது, சோனியாவின் முகம் சுருங்கியிருந்தது. பின்னர் நிதானமாக, `என் மீது அவர்களுக்கு ஏதாவது கோபம் இருக்கிறதா?' என்றார். `நான் பேசியது வரை உங்கள் மீது நூற்றுக்கு நூறு சதவிகிதம் அவர்களுக்கு எந்தவித கோபமும் இல்லை' என்றேன்.

இறுதியாக, `சிவராசன், சுபா இவர்களெல்லாம் யார்?' எனக் கேட்டார். நானும், `இவர்கள் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் என்பது உண்மைதான். விடுதலைப்புலிகள் அமைப்பில் பயிற்சி எடுத்தவர்கள் என்பதும் உண்மைதான். அதன்பின் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டார்கள். சந்திராசாமியோடு சேர்ந்து இந்தப் படுகொலைகளைச் செய்திருக்க வேண்டும்' என ஆணித்தரமாகக் கூறினேன். நான் கூறிய விவரங்களை டேப்பில் பதிவு செய்தார் சோனியா. வெளியே வருவதற்கு முன் சோனியா என்னிடம், `இந்த வழக்கை விசாரிக்க மல்டி டிசிப்ளினரி மானிட்டரிங் ஏஜென்சி (பல் நோக்குப் புலனாய்வு அமைப்பு) ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்களிடம் இதைப் பற்றிக் கூறுங்கள். நானும் அவர்களிடம் பேசுகிறேன்' என என்னை அனுப்பி வைத்தார்.    
   
பிறகு, சென்னை மல்லிகை விருந்தினர் இல்லத்தில் வைத்து இந்த ஏஜென்சியின் எஸ்.பி. தியாகராஜன் விசாரித்தார். நான் அவரைக் கூட்டிப் போய் பெங்களூருவில் சுரேஷ் மாஸ்டர் மறைத்து வைத்திருந்த பெல்ட்பாம், துப்பாக்கி ஆகியவை இருக்கும் இடத்தைக் காட்டினேன். சில பொருட்களை போலீஸார் கைப்பற்றினார்கள். இந்த விவகாரத்தில் உண்மையை மறைத்து, பொய்யான குற்றவாளிகளை ஆஜர்படுத்திப் பெரும் தவறு செய்துவிட்டார்கள்.

இந்த உண்மைகளை வெளியில் சொல்லாமல் இதுவரை மவுனம் காத்து வந்தேன். இந்தப் படுகொலை சம்பவத்திற்குப்பின், நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் என் மனைவியோடு நான் சேர்ந்து வாழ முடிந்தது. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், பா.ஜ.க. அரசு எனக்கு `ஒய்' பிரிவு பாதுகாப்பு கொடுத்தது. இப்போது நிம்மதியாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். இதுவரை யாரும் இதைப் பற்றி என்னிடம் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. நீங்கள் கேட்டதால்தான் பேசினேன். என் மனதில் இருந்த பெரிய பாரம் இறங்கிவிட்டதைப் போல் உணர்கிறேன்'' என்றார் எங்கோ வெறித்தபடியே

--
     தமிழன் சிவா

            \\\///
          /         \
          | \\   // |
        ( | (.) (.) |)
---------o00o--(_)--o00o-----------------
********************************************************
>பணக்காரன் பின்னும் பத்துப்பேர்,
பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
>பணம் உண்டானால் மணம் உண்டு.
>பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
>பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
>பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்
********************************************************
------ooo0-------------------------------
     (   )     0ooo
      \ (      (   )
       \_)      ) /
               (_/





Monday, 22 December 2008

பெண் மற்றும் பலர்

இந்த வலை பதிவுகள் நல்ல ஒரு பெண் மற்றும் ஆண் ஆதிக்க நினைவுகள் பற்றியது என கொள்ளலாம் . படியுங்கள் நன்றாக இருக்கிறது.
http://vijisekar.wordpress.com/

வாழ்கை பிரச்சனை

வாழ்கையில் பிரச்சனை என்பது வறுமை, பசி, பட்டினி என்பது மட்டுமல்ல மனசுக்குப்பிடித்த நிறைவான சுதந்தரமான வாழ்கை இல்லாததும்தான்.

Thursday, 18 December 2008

♥ : இதை படிக்காதீர்கள்




" உலக வரலாறுலஎன்ன நீங்க படிக்கிறீங்க.. ஒரு இனத்தை ஒரு நாட்டை அழிக்கனுமா?..
 
ராணுவம் வேண்டாம்,குதிரை படை வேண்டாம்,யானைப்படை  வேண்டாம்,வில்லம்பு ஈட்டி வேண்டாம்,குண்டு வீசவேண்டாம், துப்பாக்கியெடுத்து சுட வேண்டாம், ஒரு உயிரைக்கொள்ள வேண்டாம், ஒரு துளி இரத்தம் இந்த மண்ணில் சிந்த வேண்டாம்..
பிறகெப்படி நாட்டை அழிப்பது.. அழிக்கலாம்: எளிது.
 
அவன் மொழியை அழித்துவிடு.!!
மொழியை அழித்துவிட்டால்... பன்பாடு கலாச்சாரம் வீழும், இணம் வீழும், நாடு அழியும்.!!
 
இதுதானே வரலாறு..

சொந்த மொழியை கற்காமல்,பேசாமல்,படிக்காமல் உலக வரலாற்றில் எந்த இனமும் வாழ்ந்ததாக சரித்திரமில்லை..

சொந்த மொழியினை முதலில் கற்றுத்தெளி.
பிறகு எந்த மொழியையும் படி.. எல்லா மொழியையும் படி.. வேண்டாமென்று சொல்லவில்லை.

உங்கள் வீடுகளுக்கு எத்தனை ஜன்னல்கள் தேவையோ.. அத்தனை ஜன்னல்களாக நீங்கள் உலக மொழிகளை வைத்துக்கொள்ளுஙள்.
நுழைவாசலாக இருக்கிற, "தலைவாசலாக" தமிழ் இருக்கட்டும்.

 
சமைக்கிற அரிசியில் இருக்கிற கல்லை எடுத்துப்பொறுக்கி தூரப்போடும் என் இனமே..  அதைபோன்று உன் உயிருக்கு நிகரான மொழியில் கலந்திருக்கும் பிற சொல்லை நீ நீக்கவேண்டாமா?"

என் மொழியை நான் பேசாமல், வேறெந்த நாய் பேசும் என்று ஒரு ஆதங்கம் நமக்குள் ஏற்பட்டால்.. எளிதாய் வென்றுவிடலாம்."
-
(இயக்குனர் அண்னன் சீமான் நேர்காணலிரிருந்து.)

'
இஸ்ரேல்' நாட்டை உருவாக்கும் முன் யூதர்கள் செய்த  காரியம் சிதைந்து  போன அவர்கள் 'ஹீப்ரு' மொழியை காப்பற்றியது தான்.

ஆங்கிலம் என்பது மொழி மட்டுமே.
ஆனால் தமிழ் என்பது 'அறிவு', மேலும் அதுவே நம் 'அடையாளம்' .
நாம் "அடையாளம்" இல்லாமல்  வாழக்கூடாது .!!

 

 

-------------
"
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு.!"

 


Tuesday, 9 December 2008

Friday, 28 November 2008

தமிழன் என்றால் கொழும்பும் புது டில்லியும் ஒன்றுதான் !


இந்த ஆய்வுக் கட்டுரையைப் பார்க்கும் எவருக்கும் அதிர்ச்சியும் சிலருக்கு என் மீது வெறுப்பும் வரலாம். ஆனால் உண்மைகள் எப்போதும் ஒரு சிலருக்காயினும் கசப்பானதாகவே இருக்கும். பலரின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் மாறாக ஒரு கருத்து வெளிபடுத்தப்பட்டால் கணக்கற்றோரின் கண்டனத்துக்கு அந்தக் கருத்தும் கருத்துக்கு உரியவரும் தண்டைனைக்கு உள்ளாக்கப்படும் நிகழ்வுகளையும் மனித வரலாறு கண்டுள்ளது. அப்படித் தண்டனைக்கு உள்ளானவருள் சாரள்ஸ் டார்வினும் அவரது உயிர்களின் பரிணாம வளர்ச்சித் தத்துவமும் இன்றும் மதவாதிகளின் எதிர்ப்புக்கு உள்ளாகி இருப்பது பலரும் இத்தனை நூறு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் கண் கூடாகக் காணும் உண்மைகளாகும்.
இந்தியா டக்லஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி , கருணா, பிள்ளையான் போன்ற
செல்லாக்காசுகளை வைத்து வியாபாரம் நடத்த முயலுகிறது
 
இந்தியாவும் இலங்கையும் சுதந்திரம் அடைந்த காலம் ஒன்றாகவும் இரு  நாடுகளும் ஆங்கிலேயரின்

ஆய்வு: முரசத்திற்காக ஈழப்பிரியன்

ஆளுகைக்கு உட்பட்டிருந்தாலும் சில பொதுவான காரணிகள் இருப்பதை காணலாம். அடிப்படையில் இருநாடுகளும் பிரித்தானிய ஆதிக்கத்தில் விடுபட நினைத்தனவே அல்லது இரண்டு நாடுகளுமே ஜனநாயக ஆட்சி முறையில் ஆழமான நம்பிக்கையோ ஈடுபாட்டோ ஏற்படும் மனப்பான்மையோ கொண்டிருக்கவில்லை என்பதை இருநாடுகளிலும் உள்நாட்டு விவகாரங்கள் கையாளப்பட்ட விதத்திலிருந்து புரிந்துகொள்ளமுடிகிறது.
 
இருநாட்டின் சுதந்திரத்துக்குப் பின்னால் ஆட்சித் தலைமையைப் பிரபுக்கள் வர்க்கத்தைச் சேர்ந்த வகுப்பினரே பொறுப்பு ஏற்றனர். இவர்கள் ஆங்கிலக் கல்வியும் கலாச்சாரமும் கொண்ட கனவான்களாகவே இருந்துள்ளனர். அதனால் இவர்களுக்குத் தமது இனமும் வகுப்புமே உயர்வானவை என்ற நினைப்பும் தம்மை முடிசூடா மன்னர்களாக பாவனை செய்யும் மனப்பான்மையும் மிகுந்து இருப்பதைக் காணலாம். இந்தியா என்றால் இந்தி மொழியும் பிராமணியம் என்ற ஆரிய சிந்தனைப் போக்கும் மேலோங்கிய நிலையால் மகாத்மா காந்தியே விரக்தி கொண்டு விலகும் அளவுக்கு நேருவின் மேலாதிக்கம் இருந்துள்ளது. முகம்மது அலி ஜின்னாவின் மதவழி நாடு பிரிக்கப்படவும் நேருவே காரணம் என்பதை  வராலாறே பதிவு செய்துள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை வகுத்த அம்பேத்கார் கூட மதச் சார்பின்மை என்று கூறிக் கொண்டே தமது மத நம்பிக்கை சார்ந்த புத்தமதச் சின்னமான தர்மச் சக்கரத்தையும் அசோகச் சக்கரவர்த்தியின் மூன்று சிங்கங்களையும் தேசியச் சின்னங்களாக்கிக் கொண்டார். இது பற்றிய தெரிவுக்குப் பரந்த அளவிலான விவாதமோ கருத்துப் பரிமாற்றமோ இடம் பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை. தேசிய கீதம் கூட அந்நிய ஆட்சியாளரை புகழுவதாகவும் வங்க மொழியில் உள்ளது என்றும் முரண்பாடான கருத்துக்கள் உள்ளன.

இலங்கையிலும் இது போன்ற நிகழ்வுகள்தான் இடம் பெற்றுள்ளன. இலங்கையின் அரசமைப்புக்கு எதிரான தமிழரின் பலத்த எதிர்ப்புகளை குறுக்கு வழியில் பதவிகளை இலஞ்சமாகக் கொடுத்து இரு தமிழ் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்று பிரித்தானிய குடியேற்ற அலுவலகம் வரை எடுத்துச் செல்லப்பட்ட 50க்கு 50 என்ற கோரிக்கையைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலே டி.எஸ்.சேனநாயக்கா சிங்கள மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.சிங்கள இன மேலாதிக்க நிகழ்ச்சித் திட்டமாக அடுத்து இந்திய வம்சாவழித் தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது நேருவின் தலைமையில் இந்திய மத்திய அரசு எதனையும் செய்யாது நழுவிக் கொண்டது. பின்னர் நாடற்றவர்களாக்கப்பட்ட பல இலட்சம் தமிழரை ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இந்தியா மீள் குடியேற்றத்துக்கு இணக்கம் தெரிவித்து ஏற்றுக் கொண்டது. அந்தத் தமிழ் மக்களுக்கு இந்திய அரசு வழங்கிய மீள் வாழ்க்கை என்ன?  அவர்களின் இன்றைய நிலை என்ன? அவர்கள் பற்றிய அக்கறை எவருக்குமே இல்லை. குறைந்த பட்சம் திபெத் அகதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அளவுக்காயினும் அவர்களுக்கு வசதிகள் கிடைத்துள்ளனவா?

(இந்தியாவில் சுமார் 75000க்கும் அதிகமான ஈழத் தமிழ் ஏதிலிகள் உள்ளனர். அவர்களுக்கு 103 முகாம்கள் உள்ளன. அவர்களின் வாழ்வு இப்படியான அவலத்தில் கிடக்கிறது)

 

இலங்கையில் சிங்களத்தின் இனஒதுக்கல் அரசியலுக்கு இந்தியா ஆரம்பகாலத்தில் இருந்தே முழு ஆதரவும் வழங்கியே வந்துள்ளது. அதன் தலையிடாக் கொள்கை என்பது இலங்கையின் இனவெறிக் கொள்கைக்கு பக்க பலமாக இருந்து வந்துள்ளது. சுயநலம் சார்ந்த ஒரு முன்னெச்சரிக்கையை அடிப்படையில் கொண்டதாகவே இந்தியாவின் இக்கொள்கையை கருதவேண்டியுள்ளது. இதற்கு இந்தியாவின் காஷ்மீரப் பிரச்சினை முக்கிய காரணமாக இருக்கும் வாய்ப்பு அதிகமாகவே தெரிகிறது. நேருவும் அவருக்குப் பின்னால் வந்த ஆட்சியாளரும் காஷ்மீரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்ககு வெளியாரின் தலையீட்டை தவிர்த்து வருவதைக் காணலாம்.  இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் விட்டுக் கொடாத மனப்பான்மையும் ஜனநாயக பாரம்பரிய வழி முறைகளை ஏற்காத தன்மையுமே என்பதை ஐ.நா.தீர்மானத்தை அமுலாக்க இணங்காமை காட்டுகிறது.

இந்தியாவும் பாக்கிஸ்தானும் காஷ்மீர் மீது உரிமை கொண்டாட முனைவதே இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பகைமையும் போர்களும் நிலவக் காரணமாக உள்ளது. இதனை முடிவுக்கு கொண்டுவர நினைத்த ஐ.நா. காஷ்மீர மக்களின் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு மூலம் தீர்வு காணப்படவேண்டும் எனத் தீர்மானம் எடுத்தது.இத்தகைய தீர்மானம் காஷ்மீர் மக்களை பாக்கிஸ்தானுடன் இணையவோ அல்லது தனியான சுதந்திர நாடாகவோ தீர்மானித்து விடலாம் என்ற அச்சம் என்றுமே இந்தியாவுக்கு உள்ளது. எனவேதான் இந்தியா இன்று வரை ஐ.நா. தீர்மானத்தை மிக ஆக்குரோசமாக எதிர்த்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானோ நல்ல பிள்ளைபோல்  காஷ்மீரப் பிரச்சனை ஐ.நா. தீர்மானத்துக்கு அமையத் தீர்க்கப்படவேண்டும் என அடிக்கடி வலியுறுத்தி வருகிறது. இந்தியாவின் முதுகில் காஷ்மீரப் பிரச்சனை தீராத புற்று நோயாகச் சீழ்வடிந்து கொண்டிருக்கிறது.

இதுவே இலங்கைப் பிரச்சினையில் இந்தியா எதுவும் செய்ய முடியாத இக்கட்டில் மாட்டி விட்டுள்ளது. சிங்கள அரசு எந்த  வகையிலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் விடாக் கண்டன் கொடாக் கண்டனாக நடந்து கொண்டு வருகிறது. இந்தியா இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வைத் தமிழர் தலையில் சுமத்திவிடப் பல முறை முயன்று தோற்றுக் கொண்டேயிருக்கிறது.  இதே கண்ணோட்டத்தில் இந்தியா, ஈழத் தமிழர் விடயத்தில் சிங்களத்துக்கு இசைவாகவே நடந்து கொள்ள முற்படுகிறது. கொல்லப்படும் தமிழர் ஈழத்தவரோ இந்தியரோ என்ற பேதம் இந்திய அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. தமிழக மீனவராயினும் ஈழத் தமிழராயினும் சிங்களத்தின் கொலை வெறிக்குப் பலிகொடுக்க இந்திய மத்திய அரசு தயாராகவே இருக்கிறது. அதே நேரத்தில் மத்திய அரசில் தமிழகக் கட்சிகளின் கூட்டும் ஆதரவும் அவசியமாக உள்ளது. ஆனால் தமிழகத் தமிழரிடையே கொழுந்து விட்டு எரியும் ஈழத் தமிழர் பிரச்சினையால் எழுந்த உணர்வுகள் கட்டு மீறிப்போகும் நிலை தெரிகிறது. இதற்கு அணைபோடும் முயற்சியில் இந்திய மத்திய அரசு தமிழக காங்கிரஸ் கட்சியை பயன்படுத்தியும் சிறை செய்தும் கட்டுப்படுத்தி ஆட்சியைத் தக்கவைக்க முயலுகிறது.

இந்திய மத்திய அரசின் இந்தக் கொள்கையானது இலங்கை அரசுக்கு மிக வசதியாக அமைந்துவிட்டது. இலஞ்சம் ஊழல் முலமும் பிரச்சார தந்திரங்களாலும் இந்தியாவை பயன்படுத்தியும் முன்னிறுத்தியும் உலக அளவில் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்க வைத்தும் புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடித்தும் கணிசமான சாதனைகளைப் படைத்து விட்டது உண்மையே. ஆயினும் தமிழர் தரப்பு ஏற்கும் விதத்தில் ஒரு அரசியல் தீர்வை என்றுமே வைக்கும் நிலையில் சிங்களம் இல்லை என்பதே யதார்த்தம். இதுவே இந்தியாவுக்கும் பெரிய தலையிடியாக உள்ளது.

தனது பொம்மைகளாக நடக்கக் கூடிய டக்லஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி , கருணா, பிள்ளையான் போன்ற செல்லாக் காசுகளை வைத்து வியாபாரம் நடத்த முயலுகிறது.இந்தப் பேரத்துக்குத் தடையாக இருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் அவரது படை வலுவும்தான். எனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்க வைத்ததன் மூலம் புலிகளை அழித்து விட தவணை முறையில் தடை செய்து ஒழித்துக் கட்டிவிட இரண்டு இரண்டு வருடங்களுக்கு தடைசெய்து முயன்று வருகிறது.

அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் எனப் பலர் பார்த்துக் கொண்டிருக்கையில் புலிகள் இயக்கம் தனக்காகவும் தனது மக்களுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழரைப் பொறுத்த வரைக்கும் கொழும்பும் புது டில்லியும் ஒன்றுதான் என்பதை ஈழத் தமிழ் அகதிகளுக்கும் திபெத்திய அகதிகளுக்கும் இந்திய அரசு செய்து கொடுத்துள்ள சலுகைகள் வசதிகளை வைத்து எடை போடலாம்.

சுமார் 5232 திபெத்திய ஏதிலிகள் 22 பகுதிகளைக் கொண்ட ஒரு முகாம் உள்ளது. தாம் விரும்பியது போன்று வீடுகளைக் கட்டிக் கொள்ளவும் அவர்களது கலாசாரப்படி ஓட்டு வீடுகளைக் கட்டிக் கொள்ளவும் அனுமதி உண்டு. இன்னும் பலப்பல வசதிகள் வழங்கப் படுகின்றன.கீழே படங்கள் அவர்களின் கதையைச் சொல்லும் சொல்ப்படாத சலுகைகள் இன்னும் பல உள. பட்டியலிட்டால் பொறாமை உணர்வாகக் கொள்ளப்படலாம் என்பதால் அவை இங்கு தரப்படவில்லை.

 


-- 
   

            \\\///
          /         \
          | \\   // |
        ( | (.) (.) |)
---------o00o--(_)--o00o-----------------
********************************************************
>பணக்காரன் பின்னும் பத்துப்பேர்,
பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
>பணம் உண்டானால் மணம் உண்டு.
>பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
>பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
>பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்
********************************************************
------ooo0-------------------------------
     (   )     0ooo
      \ (      (   )
       \_)      ) /
               (_/

--~--~---------~--~----~------------~-------~--~----~

Friday, 14 November 2008

இந்த பெருசு ரொம்ப தான் உசாரு பாரு


நல்ல ஜோக் இன்னு எடுத்துக்கலாம் .